தமிழ் இசை மும்மூர்த்திகள்

 தமிழ் இசை மும்மூர்த்திகள்




இசை உலகில் சங்கீத மும்மூர்த்திகள் என அறியப்பட்டவர்கள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆவர்.

இது போலவே தமிழ் இசையின் மும்மூர்த்திகளென தமிழகம் போற்றும் புகழுடையவர்கள் திருமிகு சான்றோர் முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர் எனும் மூவர்.

தேனினும் இனிய தமிழை கர்நாடக சங்கீத ராகங்களில் மிக நேர்த்தியாக பாடியவர்கள் இவர்கள். மார்கழி மாத சங்கீத சபாக்களில் இவர்களில் பாடல்கள் இடம் பெறாமல் இராது. ஆனால் சற்றே வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது இவை குறைவாகவே இருப்பதுதான்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பழம் பாடகர்கர்களான, திருமதி சுப்புலக்ஷ்மி, டி கே பட்டம்மாள், ஜி என் பி, போன்றோருக்கு பின் தமிழிசை மும்மூர்த்திகளின் எத்துணை பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்பதே ஒரு கேள்விக்குறி?
1. ஏன் பள்ளி கொண்டீர் ஜயா
2. யாரோ இவர் யாரோ
3. எனக்குன் இரு பதம்
என்பதே திரும்ப திரும்ப ஒலிக்கின்றது.

முத்துத் தாண்டவரின் பவ பிரியா அல்லது பவானி என்ற ராகத்தில் அமைந்த 'பூலோக கிரி கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ' என்ற அவரின் முதல் பாடல் எனக்கு கேட்டதாக நினைவு இல்லை.

'பேசாதே நெஞ்சமே' ராகம் சூரிய காந்தம்
'காணாமல் வீணிலே காலம் கழித்தோமே' தன்யாசி
'அருமருந்தொரு தனி மருந்து' - காம்போஜி
'இன்னும் ஒரு தரம்' ராகம் சிம்மேந்திர மத்திமம்

இவை போன்று பல.

முத்துத்தாண்டவர் சீர்காழியில் பிறந்தவர். இசைக்கலையையும், மிருதங்கக் கலையிலும் தேர்ந்தவர். தீராத வெப்ப நோய் உள்ள இவர் அம்மையப்பனை ஆலயத்தில் தொழுது வர, அன்னையே குழந்தை வடிவில் வந்து உணவளித்து, தில்லை சென்று முதலில் கேட்கும் சொல்லை வைத்து பாட்டை ஆரம்பிக்க சொல்ல அவ்வண்ணமே 'பூலோக கிரி கைலாச கிரி சிதம்பரம்' என்று தொடங்கி பாட வெப்ப நோயும் குணமானது. அது முதல் தமிழில் கீர்த்தனைகள் பல பாடலானார்.

மாரிமுத்தாபிள்ளை
தில்லைவிடங்கன் என்ற ஊரிலே 18ம் நூற்றாண்டு பிறந்த இவர், தமிழ்க்கல்வி மற்றும் சமயக் கல்வி பயின்றவர். ஞானச் சித்தர். நிந்தாஸ்துதி எனும் தூற்றுமறைத்துதி என்ற வகையில் இறைவனை இகழ்வது போல் புகழ்ந்து பாடுபவர்.
தில்லையம்பலத்தான் கனவில் தோன்றி இட்ட கட்டளையின் பேரில் 'புலியூர் வெண்பா' எனும் 100 பாக்களை சிதம்பரம் பற்றி பாடியுள்ளார்.
சொற்செறிவே தாந்தச் சுடர்த்தகர வித்தையதாம் பொற்சபைநின் றோங்கும் புலியூரே-முற்சமனை வீசுபதத் தானடித்தார் விற்கொண்டமர்விளைத்த பாசுபதத் தானடித்தார் பற்று.
வட திருமுல்லைவாயில் கொடியுடை அம்மன் மீது பஞ்சரத்தின கீர்த்தனை இயற்றினார்.

உப்பும் கற்பூரமும் ஒன்றைப் போல் இருந்தாலும் ஊரெங்கும் பெரிதாய்க் கற்பூரந்தன்னைச் சோல்லாரே அப்படி அனேகத் தலமிருந்தாலும் அந்த அல்லல் வினை தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ
என்று இதனை 'அம்ச விநோதனி' எனும் ராகத்தில் இயற்றி உள்ளார்.

'யதுகுல காம்போதி ' ராகத்தில் அமைந்த 'காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே' என்ற பாடலின் கவிதை நயம் சிறந்தது.

இவர் சிவன் மீதே அனைத்து பாடல்கள் பாடினும் ஒரை ஒரு பாடல் அன்னை பராசக்தி மீது
ஏன் இந்தப் பராக்கு ஏழை மீதில் உனக்கு
என்ன வன்மமோ அம்மா
என்று 'ரீதி சநிதிரிகா' ராகத்தில் பாடி உள்ளார்.

அருணாசலக் கவிராயர்;

சீர்காழித் தலத்தில் தில்லையாடியிலே நல்லதம்பி பிள்ளை-வள்ளியம்மாள் தம்பதியின் மகனாக கி.பி 1711ம் ஆண்டில்
பிறந்த இவர் இளமையில் தாய் தந்தையரை இழந்து, தரும்புர ஆதினத்தைச் சேர்ந்த பண்டாரச் சந்ததியாரால் அபிமானிக்கப்பட்டார். 25 வயது வரை அனைத்து நூல்களையும் கற்றார். இவர் கீர்த்தனா ரூபமாக இராமாயணத்தையும், மற்றும் காழியந்தாதி, காழிக்கலம்பகம், காழிக்கோவை, தியாகேசர் வண்ணம், சம்பந்தசுவாமிகள் பிள்ளைத் தமிழ் போன்றவற்றையும் இயற்றியுள்ளார். காழி என்பது சீர்காழியைக் குறிக்கும். தமிழில் சீர்காழி தல புராணத்தை 31 அத்தியாயங்களாக தொகுத்துள்ளார். இராம நாடகத்தை கீர்த்தனை வடிவில் பகுத்துள்ளார்.
தோடி, மோகனம், ஆனந்த பைரவி, சங்கராபரணம் ஆகிய ராகங்களில் பல பாடல்கள் புனைந்துள்ளார். குறிப்பாக
'ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே - இந்தோளம்
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - மோகனம்
யாரோ இவர் யாரோ என்ன பேரோ - பைரவி
போன்றவை மிகச் சிறப்பு.
இது மட்டுமின்றி
பண்டைக்கால இசை
தேவாரப் பண்ணிசை
கருவி இசை
கீர்த்தனை இசை
சந்த இசை
தமிழிசை வளர்ச்சி
இவற்றில் இவரது பங்கு அளவற்றது.

இந்த தமிழிசை மூவருக்கும் ஆண்டு தோறும் அரசு சார்பில் விழா நடத்தப்படுகிறது.

தமிழிசை மூவரைப் போற்றுவோம். தமிழினை வளர்ப்போம். வாழ்க தமிழ். வாழ்க மானுடம்.

ஆக்கமும் பதிவும்;

சேதுமாதவன் வேங்கட்ராவ்

+918838535445 (WhatsApp)

ssssethu@gmail.com

Chennai, Tamil Nadu, India.

Comments

Popular posts from this blog

நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்

சாணக்யன் கூறும் அறம்