சிற்றெறும்பே - நீ தந்த பாடம்
மனிதர்களாகிய நாம் அனைவரும் அதிகமான எதிர்மறை எண்ணங்களைக் கொன்டிருக்கிறோம். நமது தினசரி வாழ்க்கை சலனமில்லாமல் இருப்பதே இல்லை. நடக்காது, முடியாது, இருக்காது, கிடைக்காது, இவை அனைத்தும் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட வார்த்தைகளாகிவிட்டன. இத்தகைய நிலையை கடக்க நமக்கு ஒரு சிற்றெறும்பு பாடம் கற்றுத்தருகிறது. எறும்பு மட்டுமல்ல, இயற்கையும் நமக்கு பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அதனை உணர்வதில்லை என்பதே உண்மை.
தடைகளை மீறி முன்னேறு
உன் முன்னே இருக்கும் சவால்களைப் பார்
நேர்பட யோசி/சாதகமானவற்றை எதிர்கொள்
முடிந்தவரை செயல்படு
மேற்கன்ட நான்கு தத்துவங்களையும் நமக்கு போதிப்பது ஒரு சிற்றெறும்பு.
தடைகளை மீறி முன்னேறு
எறும்புகள் தங்களது பாதையை விட்டு விலகுவதில்லை. அதன் வழியில் வரும் தடைகளின் மீது ஏறியோ அல்லது ஒரு மாற்றுப்பாதையை ஏற்படுத்திக் கொன்டு அவை முன்னேறிச் செல்கின்றன. நின்று விடுவதில்லை. திரும்பிச் செல்வதும் இல்லை. தங்களுக்குள் செய்தி பரிமாறிக்கொன்டு கூட்டமாக சேர்ந்து இழுத்துச் சென்று தடையை நீக்குகின்றன.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
இந்த குறளை எறும்புகளைப் பார்த்துதான் வள்ளுவர் எழுதியிருக்க வேன்டும்.
உன் முன்னே இருக்கும் சவால்களைப் பார்
திட்டமிடல் என்பது பற்றி நாம் எறும்புகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மழை காலத்திற்காக எறும்புகள் கோடை காலத்திலேயே சேமிக்கத் துவங்குகின்றன. பருவ மாற்றங்களைப் பற்றி அவை குறை கூறுவதில்லை. கடலினுள் குதிப்பதற்கு முன் ராட்சத அலைகள் பற்றி யோசிக்க வேண்டும். அதனை எதிர் கொள்ள தயாராக வேண்டும். வாழ்க்கையும் இது போலத்தான். நேர் மறையாக யோசித்து யதார்த்தமாக எதிர் கொள்ள வேண்டும்.
நேர்பட யோசி/சாதகமானவற்றை எதிர்கொள்
மீண்டும் எறும்பிடம் வருவோம். குளிர் காலத்தையும், மழை காலத்தையும் எண்ணி உணவை சேமித்து அக்காலம் தங்களது புற்றிற்குள் வசிக்கும் எறும்புகள், கோடை காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்க தயாராகின்றன. கோடை காலம் வந்ததும் மீண்டும் தங்களது வாழ்க்கையை துவங்குகின்றன. வரப்போகும் மழை காலத்திற்கு சேமிக்கத் துவங்குகின்றன. சக்கரம் சுழல்கிறது. வெளிச்சத்தை எதிர்பார்த்து இருட்டினை கடக்கும் சிறந்த வாழ்க்கைத்தத்துவத்தை எறும்புகள் மிகமிக எளிதாக மனிதனுக்கு கற்பிக்கின்றன.
முடிந்தவரை செயல்படு
மழை காலத்தை எதிர் கொள்ள எறும்புகள் எவ்வளவு சேமிக்கின்றன தெரியுமா? அதனால் முடிந்த மட்டும். ஆம். அவைகளால் சுமக்க முடிந்த வரை. 'உன்னால் முடிந்த வரை உழைக்கவும், சுமக்கவும் தயாராக இரு' என்று மனிதனுக்கு எறும்புகள் கூறும் அ{ற}றிவுரை இது.
நேர்மறை எண்ணங்கள் என்பது மனம் சார்ந்தது. உணர்வு பூர்வமானது. வாழ்க்கையின் வெளிச்சமான பகுதியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள மனிதனுக்கு சக்தி அளிக்கிறது. நேர்மறை எண்ணம் உடைய ஒரு மனிதன் சந்தோஷத்தையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்யத்தையும், தனது செயல்களில் வெற்றி பெறுவதுடன் எந்த தடையையும், கடினமான சூழ்நிலையையும் தன்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் உடையவராக இருக்கிறார்.
ஒரு சிறிய எறும்பும் நமக்கு ஓர் நல்லாசிரியர்.
-
எனது குருஜி திருப்பூர். செ.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கமல பாதங்களில்
சமர்ப்பிக்கிறேன்
ஆக்கமும் பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை
+91 9962859676 (Whatsapp), +91 8838535445
Email: veeyes55@yahoo.in
Comments
Post a Comment